சராசரி இந்தியன்
கவனக்குறைவாய்
நடந்து சென்று
கல்லில் மோதி விழுந்து விட்டு
கல் தடுக்கி விட்டது என்பேன்.
காசு வாங்கி
வாக்கை விற்று விட்ட பின்னர்
அரசியல் வாதி
சரியில்லை என்பேன்.
செய்வதெல்லாம்
தவறுதலாய் செய்து விட்டு
நடப்பதெல்லாம் தப்புத்தப்பாய் நடக்கிறதென்று
விதியை நொந்து கொள்வேன்.
வீதியில் கிடக்கும்
முள் விலக்காது-என்
கால் குத்தும் நேரத்தில்
அடுத்தவர் மேல் சாடி நிற்பேன்.
என் விட்டு எச்சிலையை
வீதியில் வீசிவிட்டு
வீதியெல்லாம் அசுத்தம்-இங்கே
யாருமே சுத்தமில்லை என்பேன்.
நடுவீதியில் நின்று
நட்ட நடு நிசியிலும் ஆர்ப்பரித்து விட்டு
பேசக்கூட-இங்கே
சுதந்திரமில்லை என்பேன்.
வரிசை மீறி முன் செல்ல
கேட்காத போதும்
காசை திணித்துவிட்டு
எங்கும் லஞ்சம் என்பேன்.
கடமை செய்யாது
சோம்பி இருந்துவிட்டு-இங்கே
யாருமே ஒழுங்காய்
எதுவுமே செய்வதில்லை என்பேன்.
நான்
சராசரி இந்தியன்.
0 Comments:
Post a Comment
<< Home